சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: குமாரபாளையத்தில் காவல் நிலையம் முற்றுகை – 15 நாளில் தண்டனை என எஸ்.பி. உறுதியளித்ததால் சாலை மறியல் வாபஸ்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருவேறு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நடத்திய விடிய விடிய போராட்டம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 3 வயது பச்சிளம் குழந்தை மற்றும் அமானி கிராமப் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஆகிய இருவருக்கு, வெவ்வேறு நபர்கள் பாலியல் ரீதியாகக் கடுமையான தொல்லை கொடுத்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து குமாரபாளையம் காவல் நிலையத்தை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
காவல் நிலையம் பூட்டப்பட்டதால் பரபரப்பு: பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் காவல் நிலையத்தின் பிரதான கதவுகளைப் பூட்டும் நிலைக்குப் போலீசார் தள்ளப்பட்டனர்.
இதனால் மேலும் கொந்தளித்த பொதுமக்கள், பள்ளிபாளையம் – சேலம் பிரதான சாலையில் அமர்ந்து விடிய விடிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP), சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நீண்ட நேரம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வரதராஜன் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் அடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றம் மூலம் தகுந்த கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதாக எஸ்பி எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். உயர் அதிகாரியின் இந்த அதிரடி உறுதிமொழியைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். எனினும், இச்சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



