கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
கோவை:
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவருக்கு, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்ததால், அந்த இளம்பெண் அவருடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தொடர்ந்து அந்தப் பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து வந்ததோடு, ஆள் பலத்துடன் வந்து பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் வீட்டின் முன்பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தொண்டாமுத்தூர் போலீசார், தப்பியோடிய முக்கிய குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 4 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, நள்ளிரவில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.



