‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு
சென்னை: ஆளுங்கட்சியின் தற்போதைய அரசியல் நகர்வுகளை ‘குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பான்மை இல்லாத ஒரு சூழலில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்டுத் தூது அனுப்புவது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுகவின் ஒரு அணியினருடன் விலை பேசுவது மற்றும் அமுமக உறுப்பினரையும் இழுக்க முயல்வது போன்ற காட்சிகள் அரங்கேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்திலேயே வைத்துத் தன் கட்சியில் இணைத்துக் கொள்ளும் அநாகரிக அரசியல் நடப்பதாகக் கூறியுள்ள அவர், “இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கவா மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தங்களைத் ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்கள், இன்று மக்களின் ‘துயரசக்தியாக’ அம்பலப்பட்டு நிற்கிறார்கள்” என்று விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டையும் சாடியுள்ளார். NDA-வுக்கு ஆதரவு கோரக்கூடாது என்ற நிபந்தனையோடு கடிதம் கொடுத்துவிட்டு, தற்போது நடக்கும் குதிரை பேர நாடகங்களை அமைச்சரவையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பு, இப்போது நாடறியப் பல்லிளித்துத் தோலுரிந்து போயுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.




