சென்னை மணலியில் பயங்கர மோதல்: போலீசார் கண்முன்னே ஆயுதங்களால் தாங்கிக்கொண்ட இரு தரப்பினர் – 3 பேர் காயம்!
சென்னை:
சென்னை மணலியில் கிராம சங்கப் பிரச்சினை காரணமாகப் போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பினர் ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி பெரியதோப்பு பகுதியில் ‘வ.உ.சி. கிராம சங்கம்’ செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தரப்பினர் தனியாக அறக்கட்டளை (Trust) ஒன்றை ஆரம்பித்து, அதன் மூலம் சங்கப் பணிகளைத் தன்னிச்சையாக நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அறக்கட்டளையின் இந்தச் செயல்பாட்டிற்கு, அந்தச் சங்கத்தில் உள்ள மற்றொரு பிரிவினர் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொதுக்குழு விவகாரமும் ஆர்ப்பாட்டமும்:
இப்பரபரப்பான சூழலில், வ.உ.சி. கிராம சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, அதன் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் முடிவெடுத்தனர். இதற்காகப் பொதுக்குழு நடத்த அனுமதி கோரி அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்திலும் மனு அளித்திருந்தனர்.
இருப்பினும், இவர்களின் இந்த முடிவுக்கு அறக்கட்டளை தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பொதுக்குழு கூட்டத்திற்குப் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பு நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், மணலி பெரியதோப்பில் உள்ள சங்கத்தின் நுழைவாயில் முன்பாகத் திரண்டு திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் முன்னிலையில் ஆயுத வேட்டை:
ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சங்க வளாகத்திற்குள் மற்றொரு தரப்பினரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களில் கைகலப்பாக மாறி, போலீசார் கண்முன்னே இரு தரப்பினரும் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தக் கொடூர மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த 3 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மோதல் தீவிரமடைந்ததை அடுத்து, சம்பவ இடத்தில் இருந்த போலீசார் அதிரடியாகச் செயல்பட்டு ஒரு தரப்பினரைச் சங்க வளாகத்திற்கு வெளியே தள்ளி, பிரதான இரும்புக் கேட்டைப் பூட்டி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், மணலி பெரியதோப்பு பகுதியில் மீண்டும் மோதல் வெடிக்காமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




