264 ரன் அடிச்சும் பலன் இல்லையே! வீடியோ கேம் மோடில் டெல்லியை ‘பஞ்சு பஞ்சாக’ பறக்கவிட்ட பஞ்சாப் கிங்ஸ்!
புது தில்லி: டி20 கிரிக்கெட் இப்போது பேட்ஸ்மேன்களின் கையில் இருக்கும் வீடியோ கேம் போல மாறிவிட்டது என்பதற்கு இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியே சாட்சி. 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை, பஞ்சாப் கிங்ஸ் அணி ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி சாதனை படைத்துள்ளது.
ராகுலின் ருத்ரதாண்டவம் – தப்பிய கேட்ச்.. தவித்த பஞ்சாப்! டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கே.எல். ராகுல் 12 ரன்களில் இருந்தபோது கொடுத்த சுலபமான கேட்சை ஷஷாங்க் சிங் கோட்டை விட்டார். விக்கெட் விழுந்துவிட்டது என அர்ஷ்தீப் சிங் முன்கூட்டியே கொண்டாட, அது ஏமாற்றத்தில் முடிந்தது. அந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திய ராகுல், அதன்பின் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 152 ரன்களைக் குவித்து, ஐபிஎல் வரலாற்றின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்தார். நிதிஷ் ராணாவின் அதிரடியும் சேர, டெல்லி அணி 20 ஓவரில் 264 ரன்கள் என்ற மெகா இலக்கை நிர்ணயித்தது.
பவர் பிளேவில் அரண்டு போன டெல்லி! 265 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, ஆரம்பம் முதலே ‘அட்டாக்’ மோடில் இருந்தது. பவர் பிளே முடிவதற்குள்ளேயே விக்கெட் இழப்பின்றி 116 ரன்களை விளாசி, டெல்லி பவுலர்களை நிலைகுலைய வைத்தனர்.
வெளுத்து வாங்கிய மும்மூர்த்திகள்: விக்கெட் விழுந்தாலும் ரன் வேகம் குறையவே இல்லை. வீடியோ கேமில் பந்துகளைப் பறக்கவிடுவது போல பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினர்:
- பிரயன்ஷ் ஆர்யா: 17 பந்துகளில் 43 ரன்கள்.
- பிரப்சிம்ரன் சிங்: 26 பந்துகளில் 76 ரன்கள்.
- ஷ்ரேயஸ் ஐயர்: 36 பந்துகளில் 71 ரன்கள்.
இந்த மும்மூர்த்திகளின் அசுர வேக ஆட்டத்தால், இன்னும் 7 பந்துகள் மீதமிருக்கையிலேயே (18.5 ஓவர்) பஞ்சாப் அணி இலக்கை எட்டிப் பிடித்து ‘சோலியை முடித்தது’.
தொடரும் பஞ்சாப் ஆதிக்கம்: இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியே காணாத ஒரே அணி என்ற பெருமையுடன் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது. 300 ரன்களே அடித்தாலும் சேஸ் செய்யலாம் என்ற நிலைக்கு இன்றைய டி20 ஆடுகளங்கள் மாறியிருப்பது பவுலர்களுக்குப் பெரும் சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது.






