திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 8 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, 15 வயது சிறுமி ஒருவர் 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி தனது பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை வழிமறித்த மர்ம கும்பல், வலுக்கட்டாயமாக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்று இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, யாரிடமும் சொல்லாமல் மனவேதனையில் இருந்துள்ளார். பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது.
இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அந்த 8 பேர் கொண்ட கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் அச்சத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.




