“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வி பயம் காரணமாகத் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்கு திமுக முயற்சி செய்து வருவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேசுவதை விடுத்து, பொது இடத்தில் மசோதா நகலை எரிக்கும் அநாகரிகமான செயலைச் செய்வது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
ஒரு மாநிலத்தின் பொறுப்பு வாய்ந்த முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது அநாகரிகமானது என அவர் சாடியுள்ளார். நாடாளுமன்ற நடைமுறைகளையும், இந்திய அரசியல் சாசனத்தையும் அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், திமுகவின் இத்தகைய வன்முறைப் போக்கைத் தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.




