“கட்சியினரே எனது குடும்பம்; என் மீது அதிமுக கொடியைப் போர்த்துங்கள்” – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தனது அரசியல் விசுவாசம் குறித்து உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “எனது பிள்ளைகளுக்குத் திருமணமாகி அவர்கள் தனித்தனியே செட்டில் ஆகிவிட்டனர். இனி எனக்குக் கட்சியினராகிய நீங்கள்தான் எனது குடும்பம்” என்று குறிப்பிட்டார். மேலும், தனது உடலில் அதிமுக ரத்தமே ஓடுவதாகவும், வாழ்நாளில் ஒருபோதும் துரோகத்தை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். தனது இறுதிக் காலம் குறித்துப் பேசிய அவர், “நான் இறந்தால் எனது உடல் மீது அதிமுக கொடியைத்தான் போர்த்த வேண்டும்” என உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிமுக தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.




