தமிழகத்தில் ரூ. 600 கோடி சாலை அமைக்கும் திட்டத்தில் முறைகேடு? அதிர வைக்கும் புகார்!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்ட பல்வேறு மேம்பாலங்களில், முறையான சாலைகள் அமைக்கப்படாமலேயே சுமார் 600 கோடி ரூபாய் வரை செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இந்தப் புகாரானது மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் கட்டுமானப் பணிகளின் நம்பகத்தன்மை குறித்துப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை அமைக்காமல் கணக்கு:
குற்றம்சாட்டப்பட்டுள்ள பல மேம்பாலங்களில், வாகனங்கள் ஏறும் மற்றும் இறங்கும் பகுதிகளில் மட்டுமே தார்ச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாலத்தின் பிரதான ஓடுதளப் பகுதிகளில் தார் கலவை பயன்படுத்திச் சாலை அமைக்கப்படவே இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பணிகள் முழுமையடையாத நிலையிலும், 600 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
மத்திய கைலாஷ் சர்ச்சை:
சமீபத்தில் சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தில், கான்கிரீட் ஓடுதளத்தில் தார்ச் சாலை போடப்படாததால் வாகனங்கள் தள்ளாடியபடி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அதிகாரிகள் அவசர அவசரமாக அங்குத் தார்ச் சாலை அமைத்துப் பிரச்னையைச் சரிசெய்தனர். இந்தச் சம்பவமே மற்ற மேம்பாலங்களிலும் இது போன்ற முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.






