“யார் உண்மையான சமூக நீதி காவலர்?”: தமிழக அரசை விமர்சித்து மாணிக்கம் தாகூர் எம்.பி அதிரடிப் பதிவு!
சென்னை:
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணி நிலவி வரும் சூழலில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கௌரவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், கர்நாடக அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கர்நாடகாவின் “இவா நம்மவா” மசோதா:
கர்நாடகாவில் கௌரவக் கொலைகளைத் தடுக்க “இவா நம்மவா” (Iva Nammava) என்ற புதிய மசோதாவைச் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை வரவேற்றுள்ள மாணிக்கம் தாகூர், “குறைவான பேச்சு, அதிகமான செயல்; இதுவே உண்மையான சமூக நீதி” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த முன்னேற்றமான முயற்சிக்காக “சமூக நீதி காவலன்” ராகுல் காந்தியின் தலைமைக்கும், கர்நாடக முதலமைச்சருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசுக்குக் கேள்வி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னைச் ‘சமூக நீதி காவலர்’ என்று அழைத்து வரும் நிலையில், ராகுல் காந்திக்கு அந்தப் பட்டத்தைச் சூட்டிய மாணிக்கம் தாகூர், தமிழக அரசை நோக்கிச் சில காரமான கேள்விகளை எழுப்பியுள்ளார். “மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தமிழகத்திலும் இதுபோன்ற வலுவான சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். இது எப்போது நடக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணிக்குள் இருந்துகொண்டே, சமூக நீதி விவகாரத்தில் திமுக அரசை மறைமுகமாக அவர் சாடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.