“தமிழகத்தில் 40,000 போக்சோ வழக்குகள்: ரீல்ஸ் போடுவதை விட்டுவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்” – முதலமைச்சர் ஸ்டாலினைச் சீண்டிய அண்ணாமலை!
விளாத்திகுளம் சிறுமி படுகொலை மற்றும் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து ஆண்டுகளில் 8,008 கொலைகள் மற்றும் 2,080 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும், குறிப்பாகக் குழந்தைகளுக்கு எதிரான 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதிரடி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
விளாத்திகுளம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், முதலமைச்சர் எதைப் பற்றியும் கவலையின்றி சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ போட்டுக்கொண்டிருப்பதாக அவர் சாடியுள்ளார். சமீபத்தில் இரண்டு சிறுவர்களுடன் முதலமைச்சர் வீடியோ வெளியிட்டதைக் குறிப்பிட்ட அண்ணாமலை, “நீங்கள் அந்தச் சிறுவர்களுக்குக் கல்வியில் கவனம் செலுத்தச் சொல்வது இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை; உங்கள் விளம்பர வெறிக்குச் சிறுவர்களைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், அரசுப் பள்ளிகளில் போதிய கட்டிடங்கள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் இல்லை என்றும், அழுகிய முட்டை மற்றும் தரமற்ற உணவால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “விளம்பர நாடகங்களை நிறுத்திவிட்டு, பள்ளிகள் வரை ஊடுருவியுள்ள கஞ்சா மற்றும் போதைப் புழக்கத்தைத் தடுத்து நிறுத்துங்கள்; அடிப்படை வசதிகளை முதலில் செய்து கொடுங்கள்” என அண்ணாமலை தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.