தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026: திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொ.ம.தே.க) 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சி திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, இந்த முறை கூடுதல் கட்சிகளைச் சரிக்கட்டும் வகையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு மண்டல வாக்குகளைக் குறிவைத்து இந்தத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.