போர் பதற்றத்திற்கு இடையே ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை: இந்திய ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் போர் 14-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சியுடன் தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டார். போர் தொடங்கிய பிறகு இரு அமைச்சர்களுக்கும் இடையே நடைபெறும் 4-வது பேச்சுவார்த்தை இதுவாகும். இந்த ஆலோசனையின் போது, போர் நிலவரம் மற்றும் அதன் காரணமாகப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) தற்போது நிறுத்தப்பட்டுள்ள 28 கப்பல்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அபாஸ் அரக்சியிடம் அமைச்சர் ஜெய்சங்கர் மிக உறுதியாக வலியுறுத்தினார். சர்வதேசக் கடல் வழிப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் இந்திய ஊழியர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், இந்தத் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.