இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை: 30% உற்பத்தி அதிகரிப்புடன் மத்திய அரசு அதிரடி விளக்கம்!
இந்தியாவில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் தகவல்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, உள்நாட்டு எல்பிஜி (LPG) உற்பத்தி கடந்த மார்ச் 5-ம் தேதியுடன் ஒப்பிடுகையில் தற்போது 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குத் தடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளதோடு, வணிக ரீதியான சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 258 மில்லியன் மெட்ரிக் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட நிலையங்கள் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமான கொள்ளளவில் இயங்கி வருவதால், பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் தற்கேற்படவில்லை என உறுதிபடத் தெரிவித்தார். போர்ச் சூழலால் எரிவாயு கிடைக்காது என்ற அச்சத்தில், சிலிண்டர் முன்பதிவு 55.7 லட்சத்திலிருந்து 75.7 லட்சமாக உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அதிகாரிகள், பொதுமக்கள் வதந்திகளை நம்பித் தேவையின்றி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.