கன்யாகுமரியில் பரபரப்பு: “13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும்” – அக்கட்சியினரே ஒட்டிய போஸ்டரால் சலசலப்பு!
கன்யாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் இழைப்பதாகக் கூறி, அக்கட்சியைச் சேர்ந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மாவட்டத்தின் குழித்துறை, மார்த்தாண்டம் மற்றும் மேல்புறம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினராலேயே ஒட்டப்பட்டுள்ள இந்தச் சர்ச்சைக்குரிய போஸ்டர்களில், ராகுல் காந்தியின் ஆதரவுடன் எம்எல்ஏ-க்களாகப் பதவி வகித்துக்கொண்டு, சமுதாய அந்தஸ்தையும் நன்மைகளையும் அனுபவித்துவிட்டு தற்போது கட்சிக்குத் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உடனடியாக அந்த 13 எம்எல்ஏ-க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், வரும் காலங்களில் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் அந்தப் போஸ்டர்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சொந்தக் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு எதிராகவே அக்கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ள இந்தச் சம்பவம், குமரி மாவட்ட அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.