வளைகுடா போர் சூழல்: வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு தகவல்
வளைகுடாப் போரினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் வகையில், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்திய மக்களின் நலனைப் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா ஷர்மா, எரிவாயு சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் மாற்று சிலிண்டர்களைப் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். போதிய இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.