பயணிகள் மகிழ்ச்சி: வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவைகள் நாளை முதல் முறைப்படி தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணையின்படி, நாளை முதல் சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 ஜோடி பறக்கும் ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ஜோடி ரயில் சேவைகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், பரங்கிமலை – வேளச்சேரி இடையே பிரத்யேகமாக 3 ஜோடி ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தட நீட்டிப்பின் மூலம் பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பு உறுதி செய்யப்படுவதால், தினசரி அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்களுக்குத் தடையற்ற, வேகமான பயண அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.