கறம்பக்குடி அருகே பரபரப்பு: கடன் நிலுவையால் வீட்டிற்கு தனியார் நிதி நிறுவனம் அதிரடி சீல்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நத்தமாடிப்பட்டி பகுதியில், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்திற்காகத் தனியார் நிதி நிறுவன அதிகாரிகள் வீட்டைப் பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த செங்கொடி என்பவர், தனது சகோதரர் முத்துக்குமாருக்குத் தெரியாமல் தந்தையின் வீட்டை அடகு வைத்துத் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தாத நிலையில், வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளிடம், தனது சகோதரி தனக்குத் தெரியாமல் கடன் வாங்கியுள்ளதாகவும், விரைவில் நிலுவையைச் செலுத்திவிடுவதாகவும் முத்துக்குமார் முறையிட்டார். இருப்பினும், அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டைப் பூட்டி அதிரடியாகச் சீல் வைத்தனர்.