ஜம்முவில் பரூக் அப்துல்லாவுக்கு ‘குளோஸ் ஷேவ்’: திருமண வீட்டில் துப்பாக்கிச்சூடு – 20 ஆண்டு கால சதி அம்பலம்!
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.
திருமண விழாவில் பரபரப்பு:
ஜம்முவின் ‘கிரேட்டர் கைலாஷ்’ பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, கூட்டத்தில் மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென பரூக் அப்துல்லாவை நோக்கி மிக நெருக்கத்தில் துப்பாக்கியால் சுட்டார்.
பாதுகாவலர்களின் அதிரடி:
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடனேயே சுதாரித்துக்கொண்ட இஸட் பிளஸ் (Z+) மற்றும் என்.எஸ்.ஜி (NSG) பாதுகாப்புப் படையினர், அந்த நபரைத் தள்ளிவிட்டு மடக்கிப் பிடித்தனர். பாதுகாப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கையால் குண்டு குறிதவறிச் சென்றது. இதில் பரூக் அப்துல்லா மற்றும் அவருடன் இருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.
குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்:
கைது செய்யப்பட்ட நபர் ஜம்முவைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால் (63) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், “பரூக் அப்துல்லாவைக் கொல்ல வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கத்திற்காக கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருந்தேன்; இன்று அதற்கான வாய்ப்பு கிடைத்தது” என எந்தவித சலனமுமின்றி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடமிருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உமர் அப்துல்லா கேள்வி:
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் உமர் அப்துல்லா, “இறைவனின் கருணையால் தந்தை உயிர் தப்பினார். ஆனால், இஸட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஒரு நபர் இவ்வளவு நெருக்கத்திற்குத் துப்பாக்கியுடன் வந்தது எப்படி?” எனப் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஜம்முவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பின்னால் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.