தமிழக காங்கிரஸில் ‘ராகுல் ஸ்டைல்’ அதிரடி: சீனியர் தலைவர்கள் கடும் அதிர்ச்சி!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்விற்காக ராகுல் காந்தி எடுத்து வரும் புதிய முடிவுகள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாரும் எதிர்பாராத ராஜ்யசபா தேர்வு:
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்களான தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கியப் புள்ளிகள் கடும் போட்டியில் இருந்தனர். ஆனால், அனைவரது எதிர்பார்ப்பையும் உடைத்து, திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மாணிக்கம் ராஜ்யசபா எம்பியாகத் தேர்வு செய்யப்பட்டார். புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் தேர்வு நடந்ததாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலிலும் இதே ஃபார்முலா?
இந்நிலையில், வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் இதே பாணியைப் பின்பற்ற ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, நீண்டகாலமாகப் பதவியில் இருப்பவர்களுக்குப் பதிலாக, புதிய முகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கலக்கத்தில் சீனியர்கள்:
சீனியர் தலைவர்களின் சிபாரிசுகள் இன்றி, தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் ராகுல் காந்தியின் இந்த அதிரடித் திட்டம், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற அச்சத்தில் மூத்த தலைவர்கள் ஆழ்ந்துள்ளனர்.