தமிழகத்தில் மெகா மோசடி: போலி காப்பீடு தயாரித்து பல லட்சம் சுருட்டிய 5 பேர் கொண்ட கும்பல் கைது!
தமிழகம் முழுவதும் பிரபல காப்பீட்டு நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்களைத் தயாரித்து, ஆயிரக்கணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலைத் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தென்காசியைச் சேர்ந்த இந்த கும்பல் கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் நுணுக்கமான முறையில் இந்தத் தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வந்துள்ளது.
மோசடி அம்பலமானது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது சரக்கு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த HDFC இன்சூரன்ஸ் ஆவணம் போலியானது என அந்த நிறுவனம் புகார் அளித்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் தூத்துக்குடி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த மெகா மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
அதிர்ச்சியூட்டும் மோசடி முறை:
- தகவல் மாற்றம்: இணையதளம் வழியாக நான்கு சக்கர வாகனங்களின் பதிவை, இருசக்கர வாகனங்களாகப் பொய்யாகப் பதிவேற்றம் செய்து குறைந்த பிரீமியத்தில் பாலிசி எடுத்துள்ளனர்.
- போலி ஆவணங்கள்: பின்னர் அந்தப் பாலிசியில் வாகன உரிமையாளர் பெயர், முகவரி மற்றும் வாகன விவரங்களை எடிட் (Edit) செய்து, உண்மையான பாலிசி போலவே மாற்றி ஆயிரக்கணக்கானோருக்கு விநியோகித்துள்ளனர்.
சுமார் 1,000-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிப் பல லட்சம் ரூபாய் லாபம் பார்த்த தென்காசியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் தங்கள் வாகனக் காப்பீடுகளைச் சரிபார்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.