“என்டிஏ v/s தமிழ்நாடு”: திருமங்கலத்தில் பிரிவினையைத் தூண்டும் வகையில் போஸ்டர் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (NDA) தமிழ்நாடு மாநிலத்திற்கும் இடையே நேரடி மோதல் இருப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்தப் போஸ்டர்களில், மேல் பகுதியில் இந்தி மொழியில் “NDA” என்றும், கீழ் பகுதியில் தமிழில் “தமிழ்நாடு” என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டுக்கும் நடுவே “VS” (எதிர்) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மேலும், “தமிழ்நாடு” என்ற சொல்லுக்குப் பின்னால் தமிழக வரைபடமும், அதன் உள்ளே திமுகவின் உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளன. ஒரு தேசியக் கூட்டணிக்கும், ஒரு மாநிலத்திற்கும் இடையே போர் நடப்பது போன்ற இத்தகைய சித்தரிப்புகள், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மக்களிடையே பிரிவினைவாதத்தைத் தூண்டும் முயற்சி என்றும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் போஸ்டர் விவகாரம் மதுரையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.