ஆகாயத்தில் யோகா: சென்னையில் தொட்டிலில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்து மாணவர்கள் உலக சாதனை!
சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில், மாணவர்கள் தொட்டிலில் தொங்கியபடி 150-க்கும் மேற்பட்ட கடினமான யோகாசனங்களைச் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் யோகா பள்ளியில் ‘ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஏரியல் யோகாவுடன் உயரே பறப்போம்’ என்ற தலைப்பில் இந்த நோவா (NOVA) உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்தச் சவாலான முயற்சியில் மொத்தம் 9 மாணவ, மாணவிகள் பங்கேற்று, காற்றில் தொங்கியபடி அசாத்தியமான யோகாசன முறைகளைச் செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். இவர்களின் இந்தச் சிறந்த முயற்சியைப் பாராட்டிய நோவா உலக சாதனை அமைப்பு, இதனை அதிகாரப்பூர்வ உலக சாதனையாக அங்கீகரித்தது. சாதனை படைத்த மாணவர்கள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. ஏரியல் யோகா எனப்படும் இந்தப் பயிற்சி முறை, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.