ரயில் பெட்டியா அல்லது சினிமா ஸ்டுடியோவா? ரீல்ஸ் மோகத்தால் பயணிகளுக்கு நேர்ந்த அவதி!
சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ பதிவிடுவதற்காகப் பலரும் வினோதமான மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஓடும் ரயிலுக்குள் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலர் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கரீப் ரத் விரைவு ரயிலில் பிலாஸ்பூரிலிருந்து லக்னோவிற்குப் பயணித்த மன்மோகன் வர்மா என்பவர், தனது பயணத்தின் போது சந்தித்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ரயிலுக்குள் சத்தமாக இசையை ஒலிக்க விட்டு, சக பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் சிலர் நடனமாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மன்மோகன் வர்மா அதிகாரிகளிடம் உடனடியாகப் புகாரளித்ததைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் நேரில் வந்து அந்த நபர்களை எச்சரித்துச் சென்றனர். அமைதியான பயணத்தை எதிர்பார்த்து வந்த தமக்கு, இந்தச் சம்பவம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வருத்தம் தெரிவித்துள்ள அவர், சக பயணிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே இனிமையான பயணங்கள் சாத்தியம் என ரீல்ஸ் பிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே ரீல்ஸ் மோகத்தால் உயிரிழப்புகளும் விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் இத்தகைய செயல்கள் தொடருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.