திருச்சியில் பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு
திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த நிகழ்விற்காகப் பஞ்சப்பூர் பகுதியில் மேடை அமைக்கும் பணிகள் மற்றும் இதர வசதிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆய்வின்போது, பிரதமரின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான ஹெலிபேட் தளம், வாகன நிறுத்துமிடங்கள், பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.