கச்சா எண்ணெய் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கமல்ஹாசன் எம்.பி. கடும் கண்டனம்
சென்னை: கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய மக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் உத்தரவுகளைப் பெற்று செயல்படுபவர்கள் அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தொலைதூர வெளிநாட்டுக் கரைகளிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகளை இந்தியர்கள் ஏற்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு, சொந்த நாட்டுப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் தனது பதிவில் காட்டமாக வலியுறுத்தியுள்ளார்.