குடியரசுத் தலைவரை மம்தா பானர்ஜி அவமதிப்பதா? – தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்
சென்னை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சர்வதேச சந்தால் பழங்குடியின மாநாட்டில் பங்கேற்கச் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டமிட்டே அவமானப்படுத்தியதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மூத்த குடிமகளான குடியரசுத் தலைவரை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்ற அடிப்படை அரசுப் பொறுப்பைக் கூட அறியாத மம்தா பானர்ஜிக்கு, முதல்வராக நீடிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சார்ந்தவர் என்பதால் மேற்கு வங்க அரசும், அமைச்சர்களும் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டனரா என்று வினவியுள்ள அவர், மாநாடு நடைபெறவிருந்த இடத்தை கடைசி நேரத்தில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் மாற்றியமைத்து, பழங்குடியின மக்களை அலைக்கழித்ததுடன் மாநாட்டின் நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளதாகச் சாடியுள்ளார். பழங்குடியின மக்களில் இருந்து உருவான முதல் குடியரசுத் தலைவருக்கு மம்தா பானர்ஜி அளிக்கும் மரியாதை இதுதானா என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய நாட்டின் பூர்வகுடிகளைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் இத்தகைய செயல்களை, தங்களைச் சமூக நீதி காவலர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் சகித்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் மிகக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.