சேலம் அரசு விடுதிக்குள் புகுந்து மாணவர்கள் மீது கொடூரம்: ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை!
சேலம் மாவட்டம் மறவனேரியில் உள்ள அரசு சமூகநீதி மாணவர் விடுதிக்குள் புகுந்த வெளிநபர்கள், அங்கு தங்கியிருந்த கல்லூரி மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் தங்கியுள்ள சில மாணவர்கள் ஆன்லைனில் கேம் விளையாடியபோது, வேறு சில இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்மொழித் தகராறு மோதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல் மாணவர்களைத் தாக்கியதோடு, அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசு விடுதி மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட விடுதியின் காப்பாளர் மற்றும் மாவட்ட அலுவலர் ஆகியோர் சரிவரப் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இத்தகைய அசம்பாவிதங்களுக்குக் காரணம் என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிப்பதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.