சென்னை அருகே மாயமான சிறுமி குட்டையில் சடலமாக மீட்பு: பீகார் வாலிபர் மீது உறவினர்கள் சந்தேகம்!
சென்னை பல்லாவரத்தை அடுத்த நாகல்கேனி பகுதியில் வசித்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புல்லு தாஸ் – ரிங்கு தேவி தம்பதியின் மகள் அனிஷா (10), கடந்த 3-ஆம் தேதி மாயமான நிலையில், தற்போது செங்கழுநீர் மலைக் குட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வரும் இந்தத் தம்பதியினர், தங்கள் மகள் காணாமல் போனது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மரணத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுதான்சு என்ற பீகார் வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாகச் சிறுமியின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். தனது தங்கையை கடைசியாக சுதான்சுடன் தான் பார்த்ததாகவும், அதற்குப் பிறகு அவர் காணாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி மாயமான அதே இரவில் சுதான்சு தனது வீட்டை அவசர அவசரமாகக் காலி செய்துவிட்டுத் தலைமறைவானது சந்தேகத்தை வலுப்படுத்துவதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.