“ஒவ்வொரு இரவும் மரண பயம்”: ஈரானில் சிக்கித் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் கதறல்!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், அங்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், “ஒவ்வொரு இரவும் தூங்கும்போதும், மறுநாள் காலை உயிரோடு எழுவோமா என்ற அச்சத்திலேயே பொழுதைக் கழிக்கிறோம்” என அங்குள்ள மீனவர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் கேட்கும் சிறு சத்தத்தைக் கூட குண்டு வெடிப்புச் சத்தம் என நினைத்து பதறியடித்து எழுவதாகவும், தங்களின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து நேரலாம் என்ற மரண பயத்தில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, ஈரானில் சிக்கியுள்ள தங்கள் உறவினர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தரக் கோரி, அவர்களது குடும்பத்தினர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத் தொடர்ச்சியாக மனுக்களை அளித்து வருகின்றனர். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களை உடனடியாகத் தாயகம் அழைத்து வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.