ஈரான் போர் எதிரொலி: நள்ளிரவு முதல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – சாமானியர்களுக்கு அதிர்ச்சி!
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று (மார்ச் 7, 2026) நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விநியோகத் தடை, எரிசக்தி விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சமாளிக்க மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளன.
அதன்படி, சென்னையில் வீட்டு பயன்பாட்டிற்கான (14.2 கிலோ) சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டு, ₹928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ₹868.50-ஆக இருந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டர் விலை 114.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, ₹2,043.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 மாதங்களுக்குப் பிறகு வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.