அமெரிக்க அரசுக்கு பின்னடைவு: சட்டவிரோத வரி வசூல் – ₹12 லட்சம் கோடியைத் திருப்பித் தர நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ‘பரஸ்பர வரிகள்’ (Reciprocal Tariffs) என்ற பெயரில் இறக்குமதியாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக வசூலித்த சுமார் 12 லட்சம் கோடி ரூபாயை ($130 – $175 Billion) வட்டியுடன் திருப்பித் தருமாறு மன்ஹாட்டனில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி உலக நாடுகள் மீது டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்திருந்தார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவிற்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், வர்த்தகர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே (Congress) உண்டு என்றும், அதிபர் தன்னிச்சையாக இத்தகைய வரிகளை விதிக்க முடியாது என்றும் கூறி அந்த வரி விதிப்பை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, மன்ஹாட்டன் வர்த்தக நீதிமன்ற நீதிபதி ரிச்சர்ட் ஈட்டன், இதுவரை வசூலிக்கப்பட்ட பெருந்தொகையை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு அமெரிக்கச் சுங்கத் துறைக்கு (CBP) உத்தரவிட்டுள்ளார். சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் இந்தப் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.