இஸ்ரேல் போர் முனையில் சிக்கிய இந்தியப் பயணி: “ஒவ்வொரு நொடியும் மரண பயம்” என வீடியோ பகிர்வு!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் இஸ்ரேலில் போர்ச் சூழல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு சுற்றுலா சென்ற இந்திய ‘டிராவல் இன்ஃப்ளூயன்சர்’ (Travel Influencer) சௌமில் அகர்வால், போரின் கோர முகத்தை விவரிக்கும் பதறவைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி சுற்றுலாவுக்காக இஸ்ரேல் சென்றிருந்த அவர், எதிர்பாராத விதமாகப் போர் வெடித்ததில் அங்கேயே மாட்டிக்கொண்டார். அதிகாலை முதல் நகரம் முழுவதும் ஒலிக்கும் எச்சரிக்கை சைரன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் நிலவும் பதற்றத்தை அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
“இவ்வளவு பெரிய போர் நடக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை; தற்போது இங்கு தனியாக மாட்டிக்கொண்டேன்” எனத் தெரிவித்துள்ள சௌமில், சைரன் சத்தம் கேட்ட அடுத்த நொடியே நிலத்தடி பாதுகாப்புப் புகலிடங்களுக்கு (Safe rooms) ஓடுவதே தனது அன்றாட வாழ்க்கையாகிவிட்டதாகக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இருப்பினும், இத்தகைய இக்கட்டான சூழலிலும் இஸ்ரேல் மக்கள் காட்டும் மன தைரியம் மற்றும் தங்கள் நாட்டு ராணுவத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தன்னைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பயணியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.