அமீரகத்தில் தவித்த இந்தியர்களுக்கு அடைக்கலம்: ராஜஸ்தான் தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் திடீர் போர் பதற்றம் காரணமாகச் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு இந்தியத் தொழிலதிபர் ஒருவர் புகலிடம் அளித்து உதவி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் மெர்டா சிட்டியைச் சேர்ந்த தீரஜ் ஜெயின், அஜ்மானில் உள்ள தனது பண்ணை வீட்டையே தற்காலிகத் தங்குமிடமாக மாற்றியுள்ளார். திடீர் விமான ரத்து மற்றும் ஹோட்டல் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டதால் செய்வதறியாது தவித்த இந்தியப் பயணிகளுக்கு, கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் தீரஜ் ஜெயின் கைகொடுத்துள்ளார்.
தமது பண்ணை வீட்டின் கதவுகளைத் திறந்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அங்கு தங்கியுள்ள அனைவருக்கும் தரமான உணவு மற்றும் அடிப்படை வசதிகளையும் அவர் செய்துகொடுத்துள்ளார். மேலும், துபாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிக்கித் தவிப்பவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர 11 வாகனங்களை அவர் களமிறக்கியுள்ளார். தற்போது சுமார் 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருக்கின்றனர். இக்கட்டான சூழலில் சக நாட்டு மக்களுக்குத் தொழிலதிபர் செய்துள்ள இந்த உதவி பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.