போர் பதற்றத்தால் துபாயில் சிக்கிய 300-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை வருகை: உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு!
சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்ட நிலையில், துபாயில் கடந்த 4 நாட்களாகத் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகள் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். போர்ச் சூழல் காரணமாக விமான சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டதால், நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய் விமான நிலையத்தில் தவிப்புக்குள்ளாகினர்.
பாதிக்கப்பட்ட இந்தியர்களைப் பத்திரமாக மீட்க மத்திய அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பலனாக, முதற்கட்டமாக நேற்று 217 பயணிகள் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக இன்று காலை 314 பயணிகளுடன் எமிரேட்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை திரும்பும் வழியில் துபாயில் ‘ட்ரான்சிட்’ பயணிகளாகக் காத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்களாகத் தகவல் தொடர்பின்றித் தவித்த தங்கள் உறவினர்களைக் கண்டதும், விமான நிலையத்தில் காத்திருந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கட்டிப்பிடித்து வரவேற்ற நெகிழ்ச்சியான காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தன.