100 நாள் வேலை திட்டத்தில் இயந்திரங்கள் பயன்பாடு: கிருஷ்ணகிரியில் பெண்கள் சாலை மறியல் போராட்டம்!
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உள்ள சுண்டக்காபட்டி கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) பெரும் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சிமெண்ட் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், விதிகளை மீறி நவீன இயந்திரங்களைக் கொண்டு மிகக் குறுகிய காலத்திலேயே சாலைப் பணிகளை அதிகாரிகள் முடித்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், ஒரு நாளைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியமான 319 ரூபாய்க்கு (நடப்பு நிலவரப்படி) பதிலாக, 6 நாட்கள் வேலை செய்த பெண்களுக்குத் தலா 300 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலையை முடித்துவிட்டு, தங்களுக்குத் தர வேண்டிய வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு, வழங்கிய வேலைக்கும் முறையான கூலி தராமல் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடுகளைக் கண்டித்தும், தங்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.