“ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்துவிட்டது” – முதல்வர் ஸ்டாலினை கடுமையாகச் சாடிய அண்ணாமலை!
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியலை விமர்சித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்டாலின் அவர்களே, ஏமாற்று அரசியல் உங்கள் தந்தை காலத்தோடு முடிந்துவிட்டது” என்று அவர் தனது பதிவில் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “திமுக அரசு எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, நீதிமன்றக் கண்டனங்கள் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து ‘இந்தித் திணிப்பு’ என்ற இல்லாத ஆயுதத்தை கையில் எடுப்பது உங்கள் வழக்கமாக உள்ளது. இது உங்கள் தந்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துச் சென்ற தந்திரமா?” என காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இனிமேலும் இந்த புளித்துப் போன காமெடிகளைச் செய்து கொண்டிருக்காமல், திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பெருகி வரும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப் பொருள் புழக்கம் போன்ற உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என்றும் அண்ணாமலை தனது விமர்சனத்தில் கேட்டுள்ளார். தமிழகத்தில் நிலவும் நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே ‘இந்தித் திணிப்பு’ விவகாரத்தை திமுக கையில் எடுப்பதாக அவர் அந்தப் பதிவில் குற்றம்சாட்டியுள்ளார்.