தென்காசி: “மக்களின் தேவைகளுக்கு டபுள் எஞ்சின் அரசே தீர்வு” – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு
தென்காசி: மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைவதே ஒரே தீர்வு என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார். அப்போது, தென்காசி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் அனைத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரவிருக்கும் தேர்தல் அறிக்கையில் உறுதிப்பட இடம்பெறும் என்று அவர் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையும் கோரிக்கைகளையும் மாநில அரசு முறையாக நிறைவேற்றித் தரவில்லை” என்று குற்றம்சாட்டினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சி செய்யும் ‘டபுள் எஞ்சின்’ அரசு அமைந்தால் மட்டுமே, திட்டங்கள் தடையின்றி மக்களைச் சென்றடையும் என்றும், மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.