ஐதராபாத்: காரின் பேனட்டில் போக்குவரத்து காவலரை ஒரு கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற மதுபோதை ஆசாமி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வாகனத் தணிக்கையின் போது மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபர், போக்குவரத்து காவலரை காரின் பேனட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஐதராபாத் போலீசார் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்ட முயன்றதால், அங்கிருந்த காவலர் தற்காப்புக்காக காரின் முன்பக்க பேனட்டை (Bonnet) இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். இதனைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் காரைத் தொடர்ந்து இயக்கிய நிலையில், சக காவலர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். அதன் பின்னரே பேனட்டில் தொங்கியபடி வந்த காவலர் பத்திரமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.