“திமுகவில் சமூக நீதி இல்லை”: சாதி பாகுபாடு புகார் கூறி புதிய கட்சி தொடங்கிய திமுக நிர்வாகி!
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், திமுகவில் நிலவும் சாதிய பாகுபாடுகள் மற்றும் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததைக் கண்டித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தனிக்கட்சி தொடங்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தம் அடுத்த தோட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் பல ஆண்டுகளாக திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கட்சிப் பணிகளில் முன்னின்று செயல்பட்ட போதிலும், இவருக்கு ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட எந்தவிதமான முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கட்சியின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களைத் தவிர்த்துவிட்டு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இவர் மிகுந்த விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன், “வெளியே சமூக நீதி பற்றிப் பேசும் திமுகவின் மாவட்டத் தலைமை, கட்சிக்குள்ளே கடுமையான சாதி வேறுபாடுகளைப் பார்க்கிறது. பல ஆண்டுகளாக உண்மையாக உழைத்தும் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதனால் திமுகவிலிருந்து விலகிய அவர், தற்போது ‘வெற்றி தமிழர் முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.