ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம்: ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு முக்கிய பங்குச்சந்தைகள் மூடப்படுவதாக அறிவிப்பு!
துபாய்:
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இரண்டு முக்கிய பங்குச்சந்தைகள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திலும் கடும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய நிதி வீழ்ச்சியைத் தடுக்கவும், பொருளாதாரச் சரிவிலிருந்து சந்தையைப் பாதுகாக்கவும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி, அந்நாட்டின் இரு பெரும் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் (ADX) மற்றும் துபாய் நிதிச் சந்தை (DFM) ஆகியவற்றின் வர்த்தகம் இன்றும், நாளையும் (இரு தினங்கள்) முழுமையாக நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் அறிவிப்பு சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.