மதுரையில் ரசிகர்களுடன் “தாய் கிழவி” படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள திரையரங்கில், புதிதாக வெளியாகியுள்ள “தாய் கிழவி” திரைப்படத்தினை அதன் படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தனர்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், மூத்த நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “தாய் கிழவி”. இத்திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மேலூரில் உள்ள ஒரு திரையரங்கிற்கு படக்குழுவினர் நேரில் வருகை தந்தனர். ரசிகர்களோடு இணைந்து தங்களது படைப்பைக் கண்டுகளித்த படக்குழுவினருக்கு, அங்கிருந்த பொதுமக்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை ராதிகா பேசுகையில், “இத்திரைப்படம் ஒரு முக்கியமான சமூகக் கருத்தைச் சொல்கிறது. குறிப்பாக, பெரியவர்கள் குழந்தைகளிடம் எவ்வாறு பழக வேண்டும், அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பல காட்சிகள் இதில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.