காவல்துறையினர் மீது பனிப்பந்து வீச்சு: நியூயார்க் மேயர் மம்தானியின் மென்மையான போக்கால் அதிகாரிகள் கொந்தளிப்பு!
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் போது, காவல்துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் பனிப்பந்துகளை வீசித் தாக்கிய சம்பவம், தற்போது மேயர் ஜொஹ்ரான் மம்தானி மற்றும் நியூயார்க் காவல்துறைக்கும் இடையே ஒரு பெரிய அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மான்ஹாட்டனில் உள்ள வாஷிங்டன் ஸ்கொயர் பூங்காவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பனிப்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த அதிகாரிகள் மீது சரமாரியாகப் பனிப்பந்துகளை வீசினர். இதில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்ததோடு, காவல்துறை வாகனங்களும் சேதமடைந்தன.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் மம்தானி, “இளைஞர்களுக்கு இடையிலான ஒரு சாதாரண பனிப்பந்து விளையாட்டு கைமீறிப் போனதாகவே இதைக் கருதுகிறேன்” என்று மிகவும் மென்மையான தொனியில் பதிலளித்தார். மேயரின் இந்தப் பேச்சு காவல்துறை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் காவல்துறை நலச் சங்கத்தின் (PBA) தலைவர் பேட்ரிக் ஹென்றி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “இது விளையாட்டு அல்ல, சீருடையில் இருக்கும் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடூரமான தாக்குதல். மேயரின் இத்தகைய பதில் அவரது தலைமைத்துவத்தின் தோல்வியைக் காட்டுகிறது. வன்முறையைக் குறைத்து மதிப்பிடுவது கண்டிக்கத்தக்கது” என்று சாடியுள்ளார். அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மேயரின் இந்த அணுகுமுறை நியூயார்க்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.