எல்லை மீறிய பதற்றம்: ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடிப் போர்’ பிரகடனம் செய்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த எல்லைப் பதற்றம், தற்போது ஒரு முழுமையான நேரடிப் போராக (Open War) உருவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் இலக்குகள் மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. இனி இது பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான நேரடிப் போர்” என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதாகவும், இந்தியாவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் தாலிபான் அரசு மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக, தாலிபான் படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ (Operation Ghazab Lil Haq) என்ற பெயரில் காபூல், கந்தகார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்துக் கூறுகையில், “நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது; அத்துமீறல்கள் முறியடிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.