“இந்த முறை தாக்குதல் எல்லையைத் தாண்டும்”: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ கமாண்டர் விடுத்த அதிரடி எச்சரிக்கை!
பதான்கோட்: “இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் மீண்டும் சீண்டலில் ஈடுபட்டால், அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும்” என்று இந்திய ராணுவத்தின் மேற்கு பிராந்திய கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விருது வழங்கும் விழா:
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில், மேற்கு பிராந்திய ராணுவத்தின் சார்பில் செயல்பாட்டுத் திறன் மற்றும் வீரதீரச் செயல்களுக்கான விருது வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், எல்லையில் பல்வேறு இக்கட்டான சூழல்களில் துணிச்சலாகச் செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை:
விருதுகளை வழங்கி மேடையில் பேசிய கமாண்டர் மனோஜ் குமார், எல்லைப் பாதுகாப்பு குறித்து மிக முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “பாகிஸ்தான் தனது எல்லை மீறல்களையும், இந்தியாவைச் சீண்டும் நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒருவேளை மீண்டும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டால், இந்தியாவின் பதில் தாக்குதல் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இருக்கும். வெறும் பயங்கரவாத முகாம்களைத் தாக்குவதோடு நின்றுவிடாமல், பாகிஸ்தானின் நிலப்பரப்பிற்குள்ளேயே நுழைந்து விரிவான மற்றும் பயங்கரமான தாக்குதல்களை நடத்த இந்தியா தயங்காது” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வரும் நிலையில், ராணுவ உயர் அதிகாரியின் இந்த நேரடி எச்சரிக்கை பாகிஸ்தான் தரப்பிற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.