இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை: ஜப்பானில் பயிற்சி பெறும் இந்திய அதிகாரிகள்!
இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்தவுள்ள மும்பை – அகமதாபாத் இடையிலான அதிவேக புல்லட் ரயில் சேவை, அடுத்த ஆண்டு (2027) ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் கடனுதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம், தற்போது இறுதிக்கட்டப் பணிகளை எட்டியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இச்சேவை தொடங்கும் காலக்கெடுவை உறுதி செய்துள்ள நிலையில், புல்லட் ரயில்களை இயக்குவதற்கான நுணுக்கங்களைக் கற்க 15 இந்திய ரயில்வே அதிகாரிகள் தற்போது ஜப்பானில் தங்கியிருந்து தீவிரப் பயிற்சி பெற்று வருகின்றனர். ஜப்பானின் புகழ்பெற்ற ‘ஷின்கான்சென்’ (Shinkansen) அதிவேக ரயில்களை இயக்குவது, சிக்னல்களைச் சரிபார்ப்பது மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில், இந்திய லோகோ பைலட்கள் ஜப்பானிய முறைப்படி சிக்னல்களைச் சரிபார்த்து ரயிலை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜப்பானியத் தொழில்நுட்பத்தைத் துல்லியமாகக் கற்றுக்கொண்டு வரும் இந்த அதிகாரிகள், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் பயணத்தைப் பாதுகாப்பாக வழிநடத்த உள்ளனர்.