சோமாலியாவில் உணவுப் பஞ்சம் தீவிரம்: 6.5 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் அவலம் – ஐ.நா. எச்சரிக்கை!
சோமாலியாவில் நீடிக்கும் கடும் வறட்சி, உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நாடுகளின் நிதியுதவி குறைப்பு போன்ற காரணங்களால் அந்நாடு முன் எப்போதும் இல்லாத அளவிலான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6.5 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவிற்குக் கூட வழியின்றி தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு 3.4 மில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்து 6.5 மில்லியனை எட்டியுள்ளது அந்நாட்டு அரசாங்கத்தையும் ஐ.நா சபையையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உணவுப் பஞ்சத்தினால் சுமார் 1.84 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதில் 5 லட்சம் குழந்தைகளின் நிலைமை மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய சோமாலியாவிற்கான ஐநா ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் கான்வே, சர்வதேச சமூகமும் உதவி நிறுவனங்களும் உடனடியாகத் தேவையான நிதியுதவிகளை வழங்க முன்வராவிட்டால், ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் கொடூரமான சூழல் ஏற்படும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முறையான திட்டமிடல் மற்றும் நிதிப் பங்களிப்பு மட்டுமே இந்த மாபெரும் மனிதப் பேரழிவைத் தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.