“தமிழகம் காணாத மோசமான ஆட்சி”: திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் தாக்கு!
கோவை மாவட்டம் காளப்பட்டியில் நடைபெற்ற பாஜக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழகத்தைத் தலைகுனியச் செய்துள்ள “கையாலாகாத” திமுக அரசுக்கு முடிவு கட்டி, தாய் மண்ணைத் தலைநிமிரச் செய்ய மக்கள் தயாராகிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். இன்னும் 50 நாட்களில் தமிழகம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலைச் சந்திக்கப் போகிறது என்றும், கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி தமிழகம் இதுவரை காணாத ஒரு மோசமான ஆட்சியாக அமைந்துவிட்டது என்றும் அவர் விமர்சித்தார்.
2006-11 காலகட்டத்திலான திமுக ஆட்சி “இருண்ட ஆட்சியாக” இருந்ததாகவும், 2021 முதல் தற்போது வரையிலான ஆட்சி “கொடுங்கோலாட்சியாக” உருவெடுத்துள்ளதாகவும் அண்ணாமலை சாடினார். குறிப்பாக, கோவை மக்களைத் திமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா காலத்தில் கோவையில் குறைவான தடுப்பூசி வழங்கப்பட்டது முதல், தற்போது 325 நூற்பாலைகள் மூடப்பட்டது வரை அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். ஒரு யூனிட் மின்சாரம் ₹9.25 என உயர்த்தப்பட்டதே இந்தத் தொழில் முடக்கத்திற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்துப் பேசிய அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்துத் தவறான அறிக்கையைத் தயாரித்து வழங்கினால் மத்திய அரசு எப்படி ஒப்புதல் அளிக்கும் எனக் கேள்வி எழுப்பினார். முறையான தரவுகளை வழங்காமல், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “வாய்கூசாமல் பொய்” பேசி வருவதாக அவர் சாடினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும் என அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்தார்.