ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் சாதனை: அரசு அதிகாரி வீட்டில் ₹4 கோடி ரொக்கம் பறிமுதல்!
ஒடிசா மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக, அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் கட்டாக் நகரில் சுரங்கத்துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் ஸ்ரீ தேபப்ரதா மொஹந்தி, உரிமம் பெற்ற நிலக்கரி விற்பனையாளர் ஒருவரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு, பத்ரக் மற்றும் மாதாசாஹியில் உள்ள பூர்வீக இல்லம் மற்றும் அவரது அலுவலகம் என பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். புவனேஸ்வரில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை செய்தபோது, அங்கிருந்த டிராலி பைகள் மற்றும் அலமாரிகளுக்குள் கட்டுக்கட்டாகப் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்குப் பிரத்யேக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில், முதற்கட்டமாக 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறை வரலாற்றில் ஒரு தனிநபர் அதிகாரியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய ரொக்கத் தொகை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அம்மாநில அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.