பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் கைகோர்க்கும்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உறுதி!
அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்றமான ‘கென்னசட்டில்’ (Knesset) ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, நீண்ட நேரம் கைதட்டி “மோடி, மோடி” என உற்சாகமாக முழக்கமிட்டு அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு ஆகியோர் மோடியை வரவேற்று முன்வரிசையில் அமரவைத்தனர்.
இந்த நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய சபாநாயகர் அமீர் ஓஹானா, “பிரதமர் மோடி இந்தியாவின் மிகச்சிறந்த மனிதர் மட்டுமல்ல, இஸ்ரேலின் உண்மையான மற்றும் மாறாத நண்பர்” எனப் புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர் நெதன்யாகு, மோடியைத் தனது “நெருங்கிய சகோதரர்” எனக் குறிப்பிட்டு, இருவருக்குமிடையிலான தனிப்பட்ட நட்பு இரு நாடுகளையும் இணைப்பதாகத் தெரிவித்தார். மேலும், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்குப் பாதுகாப்பு விவகாரங்களில் இஸ்ரேல் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வசிக்கும் யூத மக்களின் பங்களிப்பைப் பாராட்டியதோடு, பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து செயல்படும்” என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவும் இஸ்ரேலைப் போலவே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். அதே வேளையில், எந்தவொரு பிரச்சினைக்கும் அமைதி வழியில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தனது உரையில் வலியுறுத்தினார்.